பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

வெள்ளி, 22 மே, 2009

நிலைகுலைய ஒன்றுமில்லை... நிமிர்ந்து நட... விடுதலை!



ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகத்துயர் படிந்த தருணத்தில் ஈழத்தமிழினம் தற்போது தவித்து நிற்கின்றது. தமிழர் அனைவரினது முகத்திலும் சோகத்தினையும், இழப்புகளாலான துயரத்தினையும் தவிர வேறெதையும் காண முடியவில்லை.
இதுவரை காலமும் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த நிலங்கள் இராணுவத்தினால் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற மாயத் தோற்றப்பாடு ஒன்றினை உருவாக்குவதில் சிங்களம் மும்முரமாக முனைந்துவருகின்றது. அதற்கு திட்டம் வகுத்துக் கொடுப்பதில் இந்தியாவும் அதன் உளவுப்பிரிவான றோ அமைப்பும் தாராளமாக ஒத்துழைக்கின்றன.

புலிகளையும் அவர்களினது போராட்டத்தினையும் ஒழித்துவிட்டோம் எனக் கூறும் வல்லாதிக்க சக்திகளின் அடுத்த இலக்காக புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் தன் நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழந்துவரும் சிங்கள அரசு , புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களின் போராட்டங்களை முடக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறது. தமிழர்களின் மனவுறுதியை குழப்புவதற்காக, தமிழீழத் தேசியத் தலைவர் தம்மால் கொல்லப்பட்டுவிட்டதாக ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டிருந்தது சிங்கள அரசு. அதைக் கேள்வியுற்று முதலில் தமிழினம் கலங்கித்தான் போனது. உலகம் பூராவுமுள்ள தமிழின உணர்வாளர்கள் எல்லோருமே ஒருகணம் திகைத்துப் போனார்கள். ஆனால் பொய்மைகள் நெடுங்காலம் நிலைக்காது எனும் விதமாய் உண்மைகள் உடனடியாகவே வெளிவரத் தொடங்கின.
சில தளபதிகளை உண்மையிலேயே இழந்திருந்தாலும் தேசியத் தலைவரும், அவருடன் முக்கியமான பல தளபதிகளும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்ற செய்தி தமிழர்கள் எல்லோருக்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றது.
உலகம் பூராவும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரிடமும் ஈழ தேசத்தின் விடுதலைக்காக போராடவேண்டிய வரலாற்றுக் கடமை கையளிக்கப்பட்டிருக்கின்றது. இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டதான தோற்றப்பாடு காணப்பட்டாலும் அதில் உண்மையில்லை என்பதே உண்மை. போராட்டத்திற்கான களம் மாறியிருக்கின்றது.போராட்ட முறைமை மாறியிருக்கின்றது.ஆனால் இலட்சியம் ஒன்றுதான்.தனித் தமிழீழ தேசம் என்ற அதே இலட்சியம்தான். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்டத்துக்கான இலட்சியம் ஒருபோதும் மாறாது.
பல ஆண்டு காலமாய் கஷ்டப்பட்டு முப்படைகளோடும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத்தின் படைக்கட்டமைப்பு சிதைக்கப்பட்டுவிட்டதை நினைத்து, தமிழர்கள் எல்லோரும் கவலைப்படுகின்றார்கள் என்பதனை கண்கூடாக காண முடிகின்றது. புலிகள் தரப்பின் ஆயுதங்கள் சர்வதேசத்தரப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க தற்காலிகமாக கீழே வைக்கப்பட்டுள்ளதே தவிர, நிரந்தரமாய் கைவிடப்படவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.சர்வதேசமும் தமிழருக்கான நியாயமான தீர்வைத் பெற்றுத்தரத் தவறுமானால் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுக்கத் தமிழர் தரப்பு தயங்காது என்பதும் எதிர்கால யதார்த்தம்.
சர்வதேசம் நோக்கி இவ்வளவு நாட்களாய் பற்பல வழிகளில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள்கூட வன்னியில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழுறவுகளை காப்பாற்றத் தவறிவிட்டன. அதற்கு முதன்முதற் காரணம், ஒன்றுக்குமே உதவாத அறிக்கைகளோடு நின்றுவிட்ட சர்வதேசத்தின் கையாலாகாத்தனம்தான். அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தினை காக்கும் பொறுப்பிலிருந்து சர்வதேசம் தவறிவிட்டது. எவ்வளவோ வேண்டுகோள்கள் விடப்பட்டும் பயனில்லாமல் போனது. ஐ.நா சபை கூட தமிழரைக் காப்பாற்றப் பின்னடித்தது கவலைக்குரிய விடயமே. சர்வதேசம் எல்லாமே கூட்டுச்சேர்ந்து ஈழத்தமிழினத்துக்கு துரோகமிழைத்திருக்கின்றது. அதிலும் இந்தியாவின் துரோகத்தனத்தினை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. ஈழத்தின் அழிவுக்கு அது நேரடியாவே துணைபோனது. தேர்தலினால் தன்னும் ஆட்சிமாற்றம் வந்து அதன் மூலமாவது ஏதாவது மாற்றங்கள் வருமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இனிமேல்,இந்தியாவை நம்பி எந்தப் பிரயோசனமுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. சர்வதேச நாடுகளும் தமிழரை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்குரிய காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
தமிழருக்கென்று இருந்த ஒரேகுரலான விடுதலைப் புலிகளின் குரலும் அடக்கப்பட்டு விட்டதாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும்,
தற்போதைய நிலைமையில், தமிழர் தரப்பிடமிருந்து சர்வதேசத்திற்கான இறுதிச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

சிங்கள அரசு ஒருபோதும் தமிழருக்கான நியாயமான தீர்வை தரப்போவதில்லை. போர்முடிந்ததும் தமிழருக்கான தீர்வு வழங்கப்படும் என அறிவித்த அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் தமிழரின் போராட்ட எண்ணத்தினையும், தமிழினத்தின் விழுமியங்களையும் அழிப்பதிலேயே அக்கறை காட்டுவதோடு, களையெடுப்பு என்ற பெயரில் திரைமறைவில் பல கடத்தல்களையும் , படுகொலைகளையும் அரங்கேற்றிவருகின்றது. இந்நிலை இன்னும் பலவருடங்களுக்கு தொடரும் எனவும் அஞ்சப்படுகின்றது. இதையும்விட இப்பொழுது சாதாரண சிங்களவர்கள் கூட தமிழர்களை துன்புறுத்தத் தொடங்கிவிட்டார்கள்.அண்மையில் தமிழர்கள் இம்சிக்கப்பட்ட,அச்சுறுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் தென்னிலங்கையில் நடந்தேறியுள்ளன. அந்தளவுக்கு சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழர்கள் மீதான இனவெறி தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கையில் தமிழரின் இருப்பு கேள்விக்குறியாகும். மீறி இருந்தாலும் அச்சத்துடனான அடிமைவாழ்க்கை வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் தள்ளப்படும்.

மகிந்த அரசு புலிகளை அழித்து அவர்களிடமிருந்த அனைத்து நிலப்பரப்புக்களையும் கைப்பற்றி தான் வென்றுவிட்டதாக கொக்கரித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியக் காங்கிரஸும் அதனை நினைத்து தம் தேர்தல் வெற்றியோடு புலிகளை பழிவாங்கி விட்டதையும் சேர்த்து வெற்றிவிழாக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. பல சர்வதேச நாடுகளோ, அப்பாடா! பயங்கரவாதிகள் தொலைந்தார்கள் என நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள்.
ஆனால் தமிழினமோ, தன் உறவுகளையும், தன் தளபதிகளையும்,தன் பூர்வீக நிலங்களையும்,உரிமைகளையும் இழந்து பெருந்துயரில் வாடுகின்றது.

புலம்பெயர் தமிழ் உறவுகளே!
சிங்களவன் தான் வென்று தமிழரை அடிமைப்படுத்திவிட்டதாக கொக்கரிக்கின்றான்.
அடிமை வாழ்க்கை வாழ்வதைவிட அழிந்து போவதே மேல். சிங்களவனுக்கு கீழ் அடிமையாக வாழும் ஈனத்தனமான இனமாக நாம் வழிநடத்தப்படவில்லை நம் தானைத் தலைவனால். அப்படியொரு வாழ்வை வாழ விரும்பவும் மாட்டோம். தமிழர் உரிமைகள் பறிபோவது கண்டு பொங்கியெழுந்து போருக்குப் புறப்பட்ட தன்மானத் தமிழன் நம் தலைவன். காலமாற்றத்தினாலும் கள மாற்றத்தினாலும் புதிய பரிமாணத்துடன் தமிழர் போராட்டத்துக்கான களம் முற்றுமுழுதாக புலம்பெயர் தேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. போராட்டமானது தீர்க்கதரிசனமிக்க நம் தலைவனால் ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது என்பதனை தலைவரின் கடந்த மாவீரர் தின உரையை கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். அதனைக் கருத்தில் கொண்டு புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு உரிமைப் போராட்டத்தினை தொடருவோம். தலைவனின் வழிகாட்டல் உங்களிடம் தானாய் வந்து சேரும்.

தமிழர் எல்லோரும் விடுதலைப் போராளிகளாக மாறுங்கள்!
ஆயுதப் போராட்டங்களுக்கு நிகராய் உங்கள் அறவழிப் போராட்டங்களும் அதிசயங்கள் நிகழ்த்தும். புலிகளை அழித்து விட்டோம் என்று வெற்றி முழக்கமிடும் சிங்களத்துக்கும் அத்தோடு துணைநின்ற சதிகார சக்திகளுக்கும் தெரியப்படுத்துங்கள், பல இலட்சம் தமிழீழ விடுதலைப் போராளிகள் உலகெங்கும் உருவாகியிருக்கின்றார்கள் என்று.
"தமிழீழம்" என்ற தமிழரின்

யாராலும் அழிக்க முடியாது என்பதனை உணர்த்துங்கள்!
தமிழருக்கான ஒரே தீர்வு "தமிழீழத் தாயகம்" என்பது மட்டும்தான் என்பதனை சர்வதேசத்திற்கு உறுதியாக கூறுங்கள்!
சிங்களத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் நம் உறவுகளின் சுதந்திர வாழ்வுக்காக உரக்கக் குரல் கொடுங்கள்!
தமிழர் மீது சிங்களத்தினால் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைப் பார்த்தும் பாராமுகம் காட்டும் சர்வதேச நாடுகளை தட்டிக் கேளுங்கள்!
நம் உறவுகளை கொன்றொழித்த சிங்களப் பாவிகளை உலகின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுங்கள்!
தமிழரின் போராட்டம் முடிந்துவிட்டது என்ற சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை தகர்த்தெறிந்து தமிழரின் உரிமைப் போராட்டம் இன்னும் உத்வேகத்துடன் தொடர்கின்றது என்பதை வெளிப்படுத்துங்கள்!
இவற்றையெல்லாம் சாதிக்கும் வல்லமை உரிமைப் போராட்டத்திற்காக ஒன்றுதிரளும் உங்களிடம் மட்டும்தான் இருக்கின்றது. காலத்தின் கட்டாயம், கடமை அறிந்து உரிமைக்காய் போராடும் தன்மானத் தமிழனாய் பாயும் புலியாய் புறப்படுங்கள்!

இச்சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டால் இதைவிட வேறொரு சந்தர்ப்பம் வாய்க்காது. நம் எதிர்கால சந்ததிக்கும் அடிமை வாழ்வையும் அகதி வாழ்வையுமே பரம்பரைச் சொத்தாக விட்டுச் செல்லவேண்டிவரும். இவ்வாறானதொரு அவலநிலை , அவமானம் தமிழினத்துக்குத் தேவையா?

மூன்று தசாப்த காலமாக நம் தலைவர் நமக்காக போராடி தமிழரின் உரிமைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டு வந்திருக்கின்றார். தற்சமயம், போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு நாம் உற்ற துணையாக, சக போராளியாக இருக்கவேண்டியது ஒவ்வொரு உண்மைத் தமிழனினதும் கடமை. அந்த வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்து சரித்திரம் படைப்போம்.
நமது போராட்டத்தினைப் பார்த்து வியந்து நிற்கும் சர்வதேசத்தினை நமக்கு ஆதரவாக மாற்றிக் காட்டுவோம்.
தடுமாற்றங்கள், கலக்கங்களை தூக்கியெறிந்துவிட்டு மான்புமிகு தலைவனின் பின்னால் அணிதிரள்வோம்!
தமிழரின் போராட்டம் முடிந்துவிட்டது என அறிவித்த சிங்களத்திற்கு, தமிழரின் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது என்பதனை முழக்கமிட்டு அறிவிப்போம்!
தாயகத்தின் விடுதலைக்காக பாய்ந்தெழுவோம் தலைவன் வழியில்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

தலைவன் பேரை நாவில் உரை! தாயகத்தை கண்ணில் வரை!
நிலைகுலைய ஒன்றுமில்லை... நிமிர்ந்து நட... விடுதலை!
-பருத்தியன்-

2 கருத்துகள்:

பிளாட்டினம் சொன்னது…

அண்ணா! அருமையான எழுத்துக்கள். எங்கள் மொத்த வெற்றியும் எங்கள் கரங்களில் தான். காலம் தாழ்த்த முடியாத வரலாற்று கடன் புலத்தில் உள்ள உறவுகளிடம். நாளைக்கு வரலாறு படிக்கும் குழந்தை புலத்தவரை நோக்கி பழிக் கை காட்டுவதை தடுத்து, வரலாறை எழுதியதில் ஒவ்வொரு தமிழனுக்கும் பங்குண்டு என்ற பெருமை எங்களுக்கு வந்துசேர இந்தகணமே உழைக்க ஆரம்பிக்க வேண்டும். எங்களின் ஓய்வற்ற நியாயமான அறப் போராட்டம் நிச்சயம் விரைவில் எங்கள் உரிமைகளை வென்று தரும்.

-பருத்தியன்- சொன்னது…

நிச்சயமாக பிளாற்றினம்.
எல்லாமே எங்கள் கைகளில்தான்.
வாழ்வா? தாழ்வா? ஒருகை பார்ப்போம்.



செய் அல்லது செத்துமடி!